ஆரம்ப, நடுநிலை பள்ளிகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தரமின்றி இருப்பதாகவும், வாங்கியதில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளதாகவும்’ பள்ளி ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு என ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகை சிறப்பு நிதியாக பள்ளி வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படும். தலைமையாசிரியர்கள் கல்வி உபகரணங்களை மேலாண்மை குழு மூலம் தீர்மானம் போட்டு வாங்கி வந்தனர்.
அரசே கொள்முதல்நடுநிலை பள்ளி நுாலகங்களுக்கு புத்தகம் வாங்க ரூ.10 ஆயிரம், விளையாட்டு உபகரணங்கள் வாங்க ரூ.6 ஆயிரம், ஆரம்ப பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் வாங்க ரூ.4 ஆயிரம், ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் ஆங்கில உபகரண பெட்டி வாங்க ரூ.6 ஆயிரம் ஒதுக்கப்படுகிறது.
கால்பந்து, வாலிபால், கிரிக்கெட் பேட், டென்னிஸ் பந்து, வலை உட்பட 14 வகையான விளையாட்டு, கல்வி உபகரணங்களை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் பள்ளிகளில் இறக்கி வைத்து விட்டு செல்கின்றனர்.
இவர்களுக்கு அரசு நேரடியாக பணத்தை செலுத்துகிறது. தனியார் நிறுவனங்கள் வழங்கிய தரமற்ற உபகரணங்களால் மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை.
ரூ.4 ஆயிரம் என அரசு அறிவித்துள்ள விளையாட்டு உபகரணங்கள் ரூ.1,500 கூட பெறாது. மாணவர்கள் ஓரிரு முறை பயன்படுத்தியதுமே சேதமடைந்து விட்டது.
ரூ.10 ஆயிரத்துக்கு நுாலகங்களுக்கு வாங்கிய புத்தகங்கள் ரூ.4 ஆயிரத்துக்குகூட தேறாது.
இதற்கு முன்பு தலைமையாசிரியர்களே மேலாண்மை குழு மூலம் தீர்மானம் போட்டு வாங்கும் பொருட்கள் தரமானதாக இருந்தது.
அப்போது தலைமையாசிரியர்கள் வாங்கிய பொருட்கள் தரமானதா என அரசு கேள்வி கேட்டது.
தற்போது அரசே தரமில்லாத பொருட்களை வாங்கி அனுப்புவது வேதனையாக இருக்கிறது.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. லட்சக்கணக்கில் நிதி இழப்பு செய்யப்பட்டுள்ளது, என அவர் கூறினார்.
