♦♦மாணவர்களுக்கான இலவச திட்டங்கள் இரண்டாம் பருவத்தில் கல்வி தகவல் இணையதளம் வழியாக உள்ள விபரங்கள் அடிப்படையில் வழங்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
♦♦தமிழகத்தில் 2019-20ம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விபரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ளீடு செய்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணியை உடனுக்குடன் முடித்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
♦♦ஆனால் பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் விபரங்களை தொகுக்கும்போது மாணவர்கள் சார்ந்த விபரங்கள் தவறாகவோ அல்லது தகவல் பதிவு செய்ய வேண்டிய பகுதிகள் பூர்த்தி செய்யப்படாமல் காலியாகவோ உள்ளது தெரியவந்தது.
♦♦இதனை சரிபார்க்கும் பொறுப்பை வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஒதுக்கி தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
♦♦அதில், ‘கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணைய வழி பதிவுகள் விரைவில் முழுமை பெறும் வகையில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களிடம் அவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்குரிய இஎம்ஐஎஸ் பதிவுகளை முழுமையாக சரிபார்க்கும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
♦♦அப்பணிகளை 24ம் தேதிக்குள் முடிக்க முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகள் சார்பான விபரங்களை மதிப்பிட்டு நம்பகத்தன்மையை உறுதி செய்திட வேண்டும்.
♦♦2ம் பருவத்திற்குரிய இலவச நலத்திட்ட பொருட்களுக்குரிய தேவை பட்டியல் இஎம்ஐஎஸ் இணையதளத்தில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். எனவே வட்டார கல்வி அலுவலர்கள் குறைந்தபட்சம் 15 பள்ளிகளையும், மாவட்ட கல்வி அலுவலர்கள் 10 பள்ளிகளையும், முதன்மை கல்வி அலுவலர்கள் 5 பள்ளிகளையும் நேரில் சென்று கள ஆய்வு செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
