1,282 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு : அரசாணை வெளியீடு

பள்ளிக் கல்வித்துறையில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் ஒப்பளிக்கப்பட்ட 1,282 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மூன்றாண்டு ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் (எஸ்எஸ்ஏ) கீழ் தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2011-12-ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு நியமனம் செய்ய 1,282 பணியிடங்களுக்கு ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது.

இந்த ஆசிரியர்களுக்கான மாத சம்பளம் என்பது ஒவ்வொரு மாதமும் தற்போது சமக்ர சிக்ஷ என மாற்றியமைக்கப்பட்ட திட்ட அதிகாரிகள் மூலம் பட்டியல் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது

இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் போது, அந்தப் பள்ளிகளில் புதியதாக தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் அல்லது அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் முறையாக நடைபெறவில்லை.

அதனால் சம்பளம் வழங்கும்போது பட்டியல் தயாரிப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் நிரந்தர ஆசிரியர்களுக்கு, தற்காலிகப் பணியிடத்துக்கான தொகையைக் கணக்கிட்டு சம்பளமாக வழங்கி வருகின்றனர்.

இந்தச் சம்பளம் பல்வேறு கணக்குத் தலைப்புகளில் வழங்கப்படுவதால், எப்போது சம்பளம் வரும் என்று தெரியாது. அதேபோல, அந்தப் பணியில் இருப்பார்களா என்ற நம்பிக்கையும் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர்.

இதனால், அந்தப் பணியில் நீடிக்கிறார்களா இல்லையா என்பதை பார்த்த பின்பே அதிகாரிகள் சம்பளம் பட்டியல் தயாரிக்கின்ற நிலை உள்ளது.

அதனால், குறிப்பிட்ட தேதியில் இந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

இதனால் இந்தப் பணியிடங்களுக்கு மாதம்தோறும் தொடர் பணி நீட்டிப்பு ஆணை வழங்குவதற்கு பதிலாக, ஆண்டுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் தொடர் பணி நீட்டிப்பு ஆணை வழங்கினால் இந்தப் பிரச்னை இருக்காது என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் ஒப்பளிப்பு செய்யப்பட்ட 1,282 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தற்காலிக தொடர் நீட்டிப்பு 1.1.2019 முதல் மூன்று ஆண்டுகளுக்கு வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அரசிடம் கோரினார்.

இந்தக் கருத்துருவை பரிசீலனை செய்த தமிழக அரசு, 1,282 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 1.1.2019 முதல் 31.12.2021 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார். இதன் மூலம், அந்த ஆசிரியர்கள் குறிப்பிட்ட தேதியில் தங்களது சம்பளத்தைப் பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Design a site like this with WordPress.com
Get started