மடிக்கணினிகள் மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை

பள்ளி வேலை நாள்கள் குறைந்துள்ளதால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளில் ஆடியோ மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூர் மண்டித் தெருவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

இதையொட்டி, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அப்பகுதியில் பொதுக் கூட்ட மேடை அமைப்பது தொடர்பாக வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியது:

தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், செலுத்திய தொகையைத் திருப்பி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2017-18-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கு காரணமாக நிலுவை வைக்கப்பட்டிருந்த மடிக்கணினிகள், தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன.

தொடர்ந்து, 2017-18-ஆம் கல்வியாண்டில் படித்து முடித்தவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பாடப்பிரிவுக்கு ஏற்ப 240 நாள்கள் பள்ளியை நடத்த வேண்டும்.

ஆனால், 210 நாள்கள்தான் பள்ளிகள் இயங்குகின்றன. அதனால், தற்போது வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளில் ஆடியோ மூலம் கல்விகற்க நடவடிக்கை எடுக்கப்படும். இலவச சைக்கிள்கள் தொடர்ந்து வழங்கப்படும். வீட்டுவரி, தொழில்வரி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றார் அவர்

Design a site like this with WordPress.com
Get started