ரத்து செய்யப்பட்ட 4 ஆண்டு பட்டப்படிப்பை மீண்டும் கொண்டுவர யுஜிசி பரிந்துரை

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரைத்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் வழங்கப்பட்டுவந்த நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகள் (Four Year Undergraduate Programme) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டன.

அதனை மீண்டும் அறிமுகம் செய்யலாம் என பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக யுஜிசி அமைத்த நான்கு பேர் கொண்ட குழு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது.

ஏற்கெனவே மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் குழு வெளியிட்டிருக்கும் வரைவு தேசிய கல்விக் கொள்கை அறிக்கையிலும் நான்கு ஆண்டு படிப்பை கொண்டுவருவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

முனைவர் பட்ட ஆய்வுகளை ஊக்குவிக்கும் நோக்கில் 4 ஆண்டு பட்டப்படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று யுஜிசி குழுவின் தலைவரும் பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான பேராசிரியர் பல்ராம் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி எம்.ஏ. எம்.எஸ்சி. போன்ற முதுநிலைப் படிப்புகளிலும் ஆய்வு மேற்கொள்வதைக் கட்டாயமாக்கி அதற்கு 6-10 கிரெடிட் வழங்க வேண்டும் எனவும் ஒரே துறைக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்கி கற்பிக்கும் இளநிலை படிப்புகளை நிறுத்த வேண்டும் எனவும் யுஜிசி குழுவின் பரிந்துரையில் கூறப்பட்டிருப்பதாக பல்ராம் கூறியுள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் தினேஷ் சிங் துணை வேந்தராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகளை (FYUP) அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ரத்து செய்தார்.

Design a site like this with WordPress.com
Get started