மாணவனை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அரசுப்பள்ளியை மூடுவதா?- ஆசிரியர் சங்கம் வேதனை

அரசுப்பள்ளி மாணவனை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அப்பள்ளிகளை மூடி நூலகங்களாக மாற்றி வருவது வேதனையளிக்கின்றது என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையில், ”அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இல்லை என்று கூறி, அப்பள்ளிகளை மூடி நூலகங்களாக மாற்றி வருவது வேதனையளிக்கின்றது.

படிப்பறிவு இருந்தால் மட்டுமே நூலகத்தைப் பயன்படுத்த முடியும். கண்களைப் பிடுங்கிவிட்டு கண்ணாடி வழங்கும் முயற்சியாக இது உள்ளது.

ஒரு மாணவர் கூட இல்லையென்று அரசுப் பள்ளிகளை மூடுவது ஒருபுறம் இருக்க, பள்ளியில் சேர்ந்த மாணவனை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அப்பள்ளியை மூட அதிகாரிகள் வேகம் காட்டுகின்றனர். இது எதிர்காலத்தில் அரசுப் பள்ளிகளுக்கு முழுமையாக மூடுவிழா நடந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதற்குச் சான்றாக ஒரு நிகழ்சு திருப்பூர் கல்வி மாவட்டம் அவினாசி அருகே உள்ளே பெரியநாத பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்துள்ளது.

அங்கு சேர்ந்துள்ள ரோகித் என்ற மாணவனுக்கு சான்றிதழ் கொடுத்து வெளியே அனுப்ப, மாணவனின் தந்தை சிட்டிபாபுவை அழைத்து டிசி வாங்கிச்செல்ல தலைமையாசிரியர் புஷ்பலதா வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இதனை எதிர்த்து மாணவனின் தந்தை சிட்டிபாபு கிராம மக்கள் ஒன்று திரட்டி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனுவும் அளித்துள்ளார்.

தலைமையாசிரியரை அருகில் உள்ள கருவலூர் அரசு பள்ளிக்கு பணிமாற்றம் செய்துவிட்டு, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவனை வெளியேற்றி 60 ஆண்டுகளாக இயங்கிவந்த பள்ளியை மூடும் முயற்சி வருத்தமளிக்கிறது.

ஒரேயொரு மாணவனாக இருந்தாலும் அவனுக்குக் கல்வி அளிப்பது அரசின் கடமை. மேலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசுப் பள்ளிகளைக் காப்பாற்றி பள்ளியைத் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்

Design a site like this with WordPress.com
Get started