வருகிற 1ம் தேதி குரூப் 4 தேர்வு நடக்கிறது. தேர்வு கூடத்துக்கு செல்போன், மோதிரம் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் (குரூப் 4 பதவி) அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் 397 பணியிடங்கள், இளநிலை உதவியாளர்(பிணையமற்றது) 2688,
தட்டச்சர், இளநிலை உதவியாளர்(பிணையம்)-104,
வரிதண்டலர் (கிரேடு 1)-34,
நில அளவர்-509,
வரைவாளர்-74,
தட்டச்சர்-1901,
சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3)-784 என மொத்தம் காலியாக உள்ள 6491 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அறிவித்தது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 14ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி தான் கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினியரிங் படித்தவர்கள் என போட்டி போட்டு கொண்டு விண்ணப்பித்தனர். சுமார் 14 லட்சம் பேர் வரை தேர்வுக்கு விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குரூப் 4 பணிக்கான எழுத்து தேர்வு வருகிற 1ம் தேதி நடக்கிறது.
காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்வு எழுத வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
தேர்வு எழுதுபவர்கள் தேர்வுக்கூடம் மற்றும் அறைகளுக்கு தரவி, கைக்கடிகாரம், மோதிரம் மற்றும் ஏனைய மின்னணு சாதனங்கள், மின்னணு அல்லாத பதிவு கருவிகள், புத்தகங்கள், குறிப்புகள், கைப்பை, பதிவு செய்யும் தனிக்கருவிகளாகவோ, மோதிரம் அல்லது கைக்கடிகாரத்தின் இணைப்பாகவோ கொண்டுவரக்கூடாது.
அவ்வாறான பொருட்களை வைத்திருப்போர் காணப்பட்டால் அவர்கள் தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும்.
தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். தேவை ஏற்பட்டால் அவ்விடத்திலேயே முழு சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
