ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர்? தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளில், 551 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக, டி.ஆர்.பி., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, 0.33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 99.67 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு என்ற, ‘டெட்’ தேர்வு, ஜூன், 8, 9ம் தேதிகளில், தமிழகத்தில் நடத்தப்பட்டது.
முதல் தாளை பொருத்தவரை, பிளஸ் 2வில் குறைந்தபட்சம், 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று, டிப்ளமா கல்வியியல் முடித்தவர் முதல், பி.எட்., முடித்தவர் வரை, தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
இவர்களுக்கு, 6 முதல், 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் வகையில், வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது
குழந்தைகள் மேம்பாடு, பயிற்றுவித்தலில், 30; தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகியவற்றில், ஏதாவது ஒரு மொழி பாடத்தில், 30; ஆங்கிலம், கணிதம், சுற்றுச்சூழல் அறிவியலில், தலா, 30 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், 150 கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான, முதல் தாள் தேர்வை, 1.62 லட்சம் பேர் தேர்வெழுதினர். இதற்கான தேர்வு முடிவு, 20ம் தேதி வெளியானது. தேர்வில், 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றதாக, தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர் என்ற அதிகாரப்பூர்வ தகவலை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது.இதன்படி, 1.62 லட்சம் பேரில், 551 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அவர்களில், 410 பேர் பெண்கள். இதன்படி, 0.33 சதவீதம் பேர் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 99.67 சதவீதம் பேர் தோல்வியடைந்துள்ளனர்

Design a site like this with WordPress.com
Get started