மொத்தம் 281 பள்ளிகள் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் 85 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நீட் மற்றும் ஐஐடி தேர்வுக்கான பயிற்சி மையங்களை அமைக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி சென்னையில் 12 பயிற்சி மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சிறுபான்மையின மாணவர்களுக்காக 4 மையங்கள் தொடங்கி செயல்பட்டு வருகிறது.
மீதமுள்ள 8-ல் 4 மையங்களை அனைத்து மாணவர்களும் படிக்கும் வகையில் மாநகராட்சி பள்ளிகளில் அமைக்குமாறு சென்னை மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் பள்ளி கல்வி துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு நீட் மற்றும் ஐஐடி தேர்வுக்கு பயிற்சி அளிக்க சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மையத்தை அமைத்து சோதனை முறையில் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
