தெருக்களில் ஜாதி பெயரை நீக்க அரசாணை பிறப்பித்துள்ள தமிழக அரசு பள்ளிகளின் பெயர்களில் ஜாதியை வைத்திருப்பது துரதிருஷ்டவசமானது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே உள்ள நாராயணபுரத்தை சேர்ந்தவர் குப்பன். ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த இவர் விபத்து ஒன்றில் சிக்கி சமீபத்தில் பலியானார். இதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அவரது உறவினர்கள் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
அப்போது, சுடுக்காட்டு செல்லும் வழியை தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் பயன்படுத்தக் கூடாது என்று அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, குப்பனின் உடலை கயிறு கட்டி மேம்பாலத்தில் இருந்து கீழே இறக்கி ஆற்றைக்கடந்து சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொலைக்காட்சி சேனல்களிலும், பத்திரிகைகளிலும் செய்தியாக வெளிவந்தது.
இதுகுறித்து, உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோரிடம் முறையிட்டார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர். வழக்கு நேற்று நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவம் நடந்த பகுதி தாசில்தார் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நாராயணபுரம் கிராமத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களுக்கு தனி மயானம் உள்ளதாக கூறப்பட்டிருந்தது. பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதிகள், இதுபோன்று தனியாக மயானம் வைப்பதா என்று கூறி தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.
பின்னர் நீதிபதிகள், தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களுக்கு என்று தனி மருத்துவமனையோ, அரசு அலுவலகங்களோ, போலீஸ் நிலையங்களோ, அரசு அமைப்புகளோ இல்லாத நிலையில், அந்த பிரிவு மக்களுக்காக தனி மயானத்தை அரசு எப்படி அமைத்துக் கொடுக்கிறது.
பிணத்தில் கூட சாதி பாகுபாடா. இவ்வாறு தனி மயானம் அமைப்பதன் மூலம், சாதி பிரிவினையை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளது.
தெருக்களுக்கு வைக்கப்பட்டிருந்த சாதி பெயர்களை நீக்கி அரசாணை பிறப்பித்த தமிழக அரசு, ‘ஆதிதிராவிடர் நலப்பள்ளி’ ‘கள்ளர் சிர்திருத்தப்பள்ளி’ ‘பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி’ என்று பள்ளிகளுக்கு சாதிப் பெயர் வைத்துள்ளது துரதிஷ்டவசமானது.
இந்த சாதி பெயர்கள் ஏன் நீக்கப்படவில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதையடுத்து, குப்பன் உடலை பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கிய சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நாளை (புதன்கிழமை) அறிக்கை தாக்கல் செய்யுமாறு வேலூர் மாவட்ட கலெக்டருக்கும், சம்மந்தப்பட்ட தாசில்தாருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
