ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே அரசு பள்ளியில் மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.
கல்கிணற்று வலசை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் 13 வயது மகன் கார்த்தீஸ்வரன், அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள மின் மோட்டார் ஸ்விட்ச்சை, ஆசிரியர் ஒருவர் கூறியதின் பேரில் மாணவர் கார்த்தீஸ்வரன் ஆன் செய்துள்ளார்.
அப்போது மின் மோட்டாரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதற்கிடையே மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. உச்சிப்புளி போலீசார் பள்ளி மாணவர் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மாவட்ட கல்வித்துறை அதிகாரி பால தண்டாயுதபாணி பள்ளியில் விசாரணை மேற்கொண்டார்.
