ஓராசிரியர் பள்ளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

மாணவர் சேர்க்கை குறைவால், அரசு தொடக்க பள்ளிகளில், ஓராசிரியர் பள்ளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள, அரசு பள்ளிகளில், நாளுக்கு நாள் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. பெரும்பாலான மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேரவே விரும்புகின்றனர்.

பெற்றோரும், தங்கள் குழந்தைகள், தனியார் பள்ளிகளில் படிக்க வேண்டும் என, விரும்புகின்றனர். அதனால், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து, அரசு பள்ளிகளை, படிப்படியாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுடன், தொடக்க பள்ளிகளையும் இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளையும், எல்.கே.ஜி., – யு.கே.ஜி., வகுப்புகள் வழியாக, அரசு பள்ளிகளில் தக்க வைக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்களை இடம் மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்படி, ஆக., 28, 30ம் தேதிகளில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அரசு தொடக்க பள்ளிகளின் ஆசிரியர்கள் பலர், வேறு பள்ளிகளுக்கு மாற்றப் பட்டதால், இரண்டு ஆசிரியர்கள் இருந்த பள்ளிகள், ஓராசிரியர் பள்ளிகளாக மாறியுள்ளன.ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்களே உள்ளதால், ஒரு ஆசிரியர் மட்டுமே, அவர்களுக்கு பாடம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

Design a site like this with WordPress.com
Get started