அரசு வினாத்தாளை பின்பற்றி தேர்வை நடத்தும் தனியார் பள்ளிகள்

புதிய பாட திட்டத்தின்படி, காலாண்டு தேர்வில், ‘ப்ளூ பிரிண்ட்’ இல்லாத, வினாத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதனால், அரசின் வினாத்தாளை பின்பற்றி தேர்வை நடத்த, தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டுகின்றன.

தமிழகத்தில், பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், கொள்கை அளவில் பல்வேறு மாற்றங்களை, அரசு மேற்கொண்டுள்ளது.பாட திட்டம் மாற்றப்பட்டு, அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாட திட்டம் அமலாகியுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு முறை அமலாகியுள்ளது. மேலும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பொது தேர்வில் இருந்த, ‘ரேங்கிங்’ முறை மற்றும், ப்ளூ பிரிண்ட் வினாத்தாள் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால், மாணவர்கள், புத்தகத்தில் உள்ள பாடங்கள் முழுவதையும் படித்து, பொது தேர்வை எழுதி வருகின்றனர்.இந்த பழக்கம், மாணவர்களுக்கு நுழைவு தேர்வு எழுதுவதற்கு, எளிதான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டிலிருந்து, ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, மாவட்ட அளவில் பின்பற்றப்பட்ட, ப்ளூ பிரிண்ட் முறையும் நீக்கப்பட்டுள்ளது.தற்போது நடந்து வரும் காலாண்டு தேர்வில், ப்ளூ பிரிண்ட் இல்லாத வினாத்தாள் முறை, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புத்தகத்தில், பாடங்களின் பின்பக்க கேள்விகள் மட்டுமின்றி, பாடங்களில் உள்ள அம்சங்களில் இருந்தும், நுணுக்கமான கேள்விகள் இடம் பெற்றுள்ளன.அதனால், மாணவர்கள், பாடங்களை முழுவதுமாக படித்து, பதில் எழுதும் திறனை வளர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தனியார் பள்ளிகள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துஉள்ளது. பல பள்ளிகள், தாங்களே வினாத்தாள் தயாரிப்பதற்கு பதில், அரசின் வினாத்தாளை பயன்படுத்த ஆர்வம் காட்டுவதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Design a site like this with WordPress.com
Get started