புதுச்சேரியில் தனியார் பள்ளி ஒன்று முன்னறிவிப்பின்றி நிரந்தரமாக மூடப்பட்டதால் 380 மாணவ, மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

காலாப்பட்டுவில் செயல்பட்ட அமலா தனியார் மேல்நிலை பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வந்தனர். இந்த நிலையில் அந்த பள்ளி நிரந்தரமாக மூடப்பட்டு இருப்பதாகவும் மற்ற தகவல்களுக்கு கல்வித்துறையை அணுகுமாறும் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை கண்டு மாணவர்களும் பெற்றோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் காலாப்பட்டு காவல்நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது போலீசார் அளித்த தகவலின்படி, பள்ளியில் பயின்ற 10 ம் வகுப்பு மாணவரை ஜாமென்ட்ரி பாக்ஸ் கொண்டு வராததால் ஆசிரியை கண்டித்ததாகவும் ஆத்திரமடைந்த அந்த மாணவனின் பெற்றோர், பள்ளிக்கு வந்து முதல்வர் ஆனந்தனை கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு இல்லை என்று கூறி பள்ளியை நிர்வாகம் மூடி இருப்பதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
