தமிழகம் முழுவதும் 2,951 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாகவும், மழைக்காலத்துக்கு பின் தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் வேகமாக பரவியுள்ளதாகவும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதர மையம், தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சலால் எந்த உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்பது தான் அரசின் இலக்கு என கூறிய அவர், தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்த பள்ளி மாணவர்களை ‘தூய்மையின் தூதுவர்களாக‘ பயன்படுத்தி, தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். டெங்கு பாதிப்பு அதிகமுள்ள வடசென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கண்காணிக்க தனி குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்
