நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த நிலையில் அதிகாலை நேரம் என்பதால் பெரும் விபத்தில் இருந்து மாணவர்கள் உயிர் தப்பினர்.
குப்பிச்சிபாளையத்தில் செயல்பட்டு வரும் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 240 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியின் வகுப்பறை ஒன்றில் கான்கிரீட் மேற்கூரை அதிகாலையில் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் மாணவர்கள் அமரும் மேசை, பாடப்புத்தகங்கள் வைக்கும் கல்லால் ஆன அலமாரி உள்ளிட்டவை சேதமடைந்தன.
பள்ளி நேரத்தில் இந்த விபத்து நடந்திருந்தால் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என்று அச்சம் தெரிவித்துள்ள பொதுமக்கள், பள்ளிக்கட்டிடங்களை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் வகுப்பறை சேதமடைந்துள்ளதால் அந்த வகுப்பு மாணவர்களை மரத்தடியில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
