முதன்மை கல்வி அலுவலராக தலைமை ஆசிரியரை நியமித்ததற்காக கல்வி அமைச்சருக்கு, பட்டதாரி ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மனோகரன், பொதுச் செயலர் பாரி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பள்ளிக் கல்வித் துறையில் ஒன்றாம் வகுப்பில் இருந்து, பத்தாம் வகுப்பு வரையிலான பணிகளை, முதன்மை கல்வி அலுவலர் கவனிக்கிறார். எனவே, அந்த பதவிக்கு சீனியர் தலைமை ஆசிரியரை பதவி உயர்வு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என, பட்டதாரி ஆசிரியர் சங்கம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், தலைமை ஆசிரியர் மீனாட்சிசுந்தரத்தை முதன்மை கல்வி அலுவலராக நியமித்து அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்களது நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய கல்வி அமைச்சர் கமலக்கண்ணனுக்கு எங்கள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
