டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெங்குக்காய்ச்சலைப் பரப்பும் வகையில் குவிந்து கிடக்கும் தேவையற்ற குப்பைகள் மற்றும் தேங்கிய நீரை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் பள்ளிகளை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் அதனை தடுப்பது குறித்த விழிப்புணர்வை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு டெங்கு அறிகுறி தெரிந்தாலோ, 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தாலோ அவர்களை உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்துமாறும் கூறப்பட்டுள்ளது.
