உள்ளாட்சி தேர்தலுக்கு தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
.உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. தங்கள் பெயர்கள் பட்டியலில் உள்ளதா என வாக்காளர்கள் சரிபார்க்கலாம்.
தற்போது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் அலுவலர், உதவி அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்வர். கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகள் கட்சி சார்பற்றவை.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடலாம்.
தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு இம்மாத இறுதியில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அதில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளின்படி நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும். அதற்கு தயாராக மாவட்டங்களில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன
.கிராம ஊராட்சிகளில் தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என நான்கு பேருக்கு ஓட்டளிக்க வேண்டியிருக்கும்.
தற்போது ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள், தேர்தல் அலுவலர்கள், உதவி அலுவலர்களை தேர்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
